TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் இலக்கணம் - எழுத்து - 1



வணக்கம் நண்பர்களே !! தமிழ் இலக்கணம் பற்றிய பதிவினை எழுதுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க , இம்மாதத்தில் , தமிழ் இலக்கணம் பற்றிய அனைத்துப்பதிவுகளையும் வெளியிடலாம் என்றுள்ளேன். சிலபஸ்ஸில் உள்ளபடி பார்த்தால் , பல இலக்கணவகைகள் புரியாமல் போய்விடலாம் என்பதால் , தமிழ் இலக்கணம் முழுமையும் என்னால் முடிந்தவரை சிறியதாகவும் எளிமையாகவும் விளக்க முயற்சிக்கிறேன் .


தமிழ் இலக்கணம் 5 வகைப்படும் என்று அனைவரும் அறிவீர் . அவையாவன ,
1.   எழுத்து
2.   சொல்
3.   பொருள்
4.   யாப்பு
5.   அணி
இந்த பகுதியில் , எழுத்து இலக்கணத்தை பார்க்கலாம் .

எழுத்து

முதலெழுத்து

‘அ’ – முதல் ‘ஔ’  வரையுள்ள உயிரெழுத்துகள் 12-ம் , ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள மெய்யெழுத்துகள் 18 – ம் ஆன 30 எழுத்துகளும் , முதலெழுத்துகளாகும் . இந்த 30 எழுத்துகளும் சேர்ந்து , 216 உயிர்மெய் எழுத்துகள் உருவாக காரணமாக இருப்பதால் , இவை முதலெழுத்துகள் என்றழைக்கப்படுகின்றன .


மாத்திரை

எழுத்துகள் ஒலிக்கப்படும் , கால அளவு மாத்திரை எனப்படும் . இயல்பாக நாம் கண்ணிமைக்கும் நேரம்  மற்றும் கைநொடிக்க ஆகும் நேரமே ஒரு மாத்திரை எனப்படும் .

1.  உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகளை , குறில் , நெடில் என இருவகையாக பிரிக்கலாம் .

குறில்
நெடில்




குறில்

குறுகிய ஓசையினை உடைய எழுத்துகள் .

ஒரு மாத்திரை கால அளவில் ஒலிக்கும்

நெடில்

நீண்ட ஓசையினை உடையது .

இரண்டு மாத்திரை நேரத்தில் ஒலிக்கும் .


2.  மெய்யெழுத்துகள்

மெய்யெழுத்துகளில் , வன்மையான ஓசையினை உடைய எழுத்துகள் வல்லினம் என்றும்  , மென்மையான ஓசையையுடைய எழுத்துகள் , மெல்லினம் என்றும் , இவற்றிற்கு இடைப்பட ஓசையை உடையவை இடையினம் என்றும் அழைக்கப்படுகின்றன .ஒவ்வொரு வல்லின எழுத்திற்கும்  , அடுத்து வரும்  மெல்லின எழுத்து , அதன் இனவெழுத்து எனப்படும் .

‘க்’ என்பதன் இனவெழுத்து ‘ங்’
‘ச்’ என்பதன் இனவெழுத்து ‘ஞ்’

மெய்யெழுத்துகள் , ஒவ்வொன்றும் அரை மாத்திரை அளவில் ஒலிக்கும் .

மெய்யெழுத்துகள் – 18
க ச ட த ப ற
வல்லினம்
ங ஞ ண ந ம ன
மெல்லினம்
ய ர ல வ ழ ன
இடையினம்


3.  சார்பெழுத்துகள்

முதலெழுத்துகளை சார்ந்து வரும் , அதே நேரத்தில் முதலெழுத்துகளின் திரிபு மற்றும் விகாரத்தின் காரணமாக பிறக்கும் எழுத்துகளை , சார்பெழுத்துகள் என்பர் .

இவை பத்து வகைப்படும் .

சார்பெழுத்துகள்
1.   உயிர்மெய்
6.   குற்றியலிகரம்
2.   ஆயுதம்
7.   ஐகாரக்குறுக்கம்
3.   உயிரளபெடை
8.   ஔகாரக்குறுக்கம்
4.   ஒற்றளபெடை
9.   மகரக்குறுக்கம்
5.   குற்றியலுகரம்
10. ஆயுதக்குறுக்கம்

1.  உயிர்மெய்

ஒரு உயரெழுத்தும் , மெய்யெழுத்தும் சேர்ந்து பிறப்பவை உயிர்மெய் .

12 உயிரெழுத்துகளும் , 18 மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து , மொத்தம் 216 உயிர்மெய்யெழுத்துகள் தோன்றும் .

5 உயிர்க்குறில் , 18 மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து , 90 உயிர்மெய்க்குறிலும் , 7 உயிர்நெடில் , 18 மெய்யெழுத்துகளுடன் இனைந்து 126 உயிர்மெய் நெடிலும் பிறக்கின்றன .

எ.கா –

உயிர்க்குறில் = அ , இ , உ , எ , ஒ
மெய்யெழுத்து = க் – ன்

குறில் + மெய்யெழுத்து = க , ங , ச ,…. , கி , ஙி ,… ,கு ,ஙு , … கெ , ஙெ


உயிர்நெடில் = ஆ , ஈ, ஊ ,ஏ ,ஐ, ஓ ,ஔ
நெடில் + மெய்யெழுத்து = கா ,ஙா …. ,கீ , ஙீ ,…, கூ , ஙூ ,,,,. கே , ஙே


6 வல்லின மெய்யெழுத்துகளுடன் , 5 உயிர்க்குறில் இணைந்து 30 வல்லின உயிர்மெய்க்குறிலும் , அதே 6 வல்லின மெய்யுடன் , 7 உயிர்நெடில் எழுத்துகள் சேர்ந்து 42 வல்லின உயிர்நெடில் எழுத்துகளும் பிறக்கின்றன .

எ.கா

வல்லின எழுத்துகள்  = க ச ட த ப ற

உயிர்க்குறில் = அ , இ , உ, எ, ஒ

குறில் + வல்லினம் = க , கி , கு , கெ , கொ , ச , சி, சு ,செ …


இதே போன்று இடையினம் மற்றும் மெல்லின எழுத்துகளுடன் , உயிர்க்குறிலும் , உயிர்நெடிலும் இணையும் .


உயிர்மெய்யெழுத்து்களை பிரித்தால் ,

க = க் + அ

முதலில் மெய் (க்) யும் , அடுத்து உயிரும் (அ) , அமையும் . இதை ,மெய்யுயிர் என்று அழைப்பதே முறையாகும் . ஆனால் , உயிரெழுத்தின் சிறப்பு காரணமாக  , உயிர்மெய் என்று அழைக்கப்படுகிறது .


2.  ஆய்தம்

மூன்று புள்ளிகளாக எழுதப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம் , தனிநிலை , புள்ளி , ஒற்று என்று வேறு பெயர்களும் உண்டு . தனக்குமுன்னர் ஒரு உயிர்க்குறிலையும் , பின்னர் ஒரு வல்லினமெய்யையும் பெற்றே இது உச்சரிக்கப்படும் .

எ.கா

அஃது = அ (உயிர்க்குறில்) + ஃ (ஆய்தம் ) + து (த்+உ , த் என்பது வல்லினம் . அதனுடன் ‘உ’ எனும் உயிர் இணைந்து வந்துள்ளதால் , வல்லின உயிர்மெய் ஆகின்றது .)

3.  உயிரளபெடை

படிக்கும்போது உயிரளபடை என்று யாரும் படிக்காதீர்கள் .இது ‘பெடை’ .

உயிர் + அளபெடை . அளபெடை என்றால் , நீண்டு ஒலித்தல் என்று பொருள் .

உயிரெழுத்துகளில் , நெட்டெழுத்துகள் ஏழும் , தமக்குரிய இரண்டு மாத்திரைகளில் (குறில் = 1 மாத்திரை  , நெடில் = 2 மாத்திரை) இருந்து நீண்டு ஒலிக்கும் நிகழ்வு , உயிரளபெடை ஆகும் .

முதலெழுத்து , இடையெழுத்து , கடையெழுத்து என்று , மூவகை இடங்களில் , இவை நடைபெறும் .

எ.கா –

1.   ஓஒதல் வேண்டும் .
இதில் ,’ ஓதல் ‘ என்று வந்திருக்கவேண்டும் . இவ்விடத்தில் ‘ஓ’ எனும் உயிர்நெடில் எழுத்து , தனக்குரிய இனவெழுத்தான  ‘ஒ’ என்று தொடர்ந்து வந்து அளபெடுத்துள்ளது . மேலும் , வார்த்தையின் தொடக்கத்திலேயே அளபெடுத்துள்ளதால் , இது முதல் எழுத்துஅளபெடுக்கும் வகையறா ஆகும் .


2.   கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சான்றாய்
இதில் , வார்த்தையின் நடுவில் ‘தூ (த் + ஊ)’ எனும் உயிர்மெய் நெடில் , தன் இனவெழுத்தான ‘உ’ வுடன் இணைந்து அளபெடுத்து வருகிறது . வார்த்தைகளின் நடுவில் அளபெடுத்து வரும்காரணத்தினால் , இவை இடையெழுத்து அளபெடுத்துவரும் வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகும் . இதேபோல் , கடையெழுத்து அளபெடுத்து வருவதையும் எ. காவுடன் விளக்கலாம் .

உயிரளபெடையானது , மூன்று வகைப்படும் .

1.   இசைநிறையளபெடை
செய்யுளின் ஓசை குறையுமிடத்து , குறைந்த ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு அளபெடுத்தல் .
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்
2.   இன்னிசையளபெடை
ஓசை குறையவில்லை எனினும் , இனிமைக்காக அளபெடுத்தல்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்சார்வாய்
3.   சொல்லிசையளபெடை
பெயர்ச்சொல்லை , வினைச்சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தல்.
உரனசைஇ உள்ளம் துணையாக . (இதில் உரனசை என்பது விருப்பம் எனும் பெயர்ச்சொல்லாகும் . அதனுடன் இ என்பது இணைந்து விரும்பி என்று வினைச்சொல்லாக பொருள் தரும்பொருட்டு , அளபெடுத்துள்ளது)


இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்தவும்


தொடர்புடைய பதிவுகள்


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .

Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *